cinema

img

உலகம் பார்த்த சினிமா - “புவியை விழுங்கும் புதை சேறு”

“Costa brava,Lebonan”-(நெட்பிளிக்ஸ்)(2021)(லெபனான்) வல்லரசுகளின் அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் ஒரு புறம். இயற்கைப் பேரழிவு, பேரிடர் மறுபுறம். ஆனால் நெகிழி, மின்னணுக் கழிவுகளாலான குப்பைகளால் உலகம் விரைவில் மூழ்கடிக்கப்படும் அரவமற்ற அபாயத்தை எதிர்கொண்டிருப்பது இன்னொரு புறம். உலகம் முழுவதும்,குப்பைகளை எரிப்பதும், மண்ணுக்குள் புதைப்பதும் தொடர் நடவடிக்கையாகவே உள்ளது. குப்பைகளின் பெருக்கம் இப்படியே தொடர்ந்தால், 2050இல், கடல்களில் வாழும் மீன்களை விட,பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்ற புள்ளிவிபரம் மேலும் அச்சுறுத்தலாக உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால், பெய்ரூட் நகரம் வாழத் தகுதியற்றதாகிறது. இதிலிருந்து வாகீத் குடும்பம் தப்பித்து,நகருக்கு வெளியே உள்ள ஆதிகால பண்ணை வீட்டிற்கு  குடிபெயர்கிறது. பிழைத்திருக்க ஓடும் குடும்பத்தை பின்தொடர்ந்து துரத்துகிறது குப்பைக் குவியல்.இந்த அபாயத்தை எதிர்த்து வாகீத் குடும்பம்  நடத்தும் போராட்டமே,”கோஸ்டா ஃபிரேவா,லெபனான்”என்ற படம். ஆஸ்துமா நோயாளியான முதிய தாய்.நாடறிந்த பாடகியும், சூழலியல் கேட்டுக்கு எதிரான போராளியும்,காதல் மனைவியுமான ஷொரையா; பதின்மவயதிலும் எட்டுவயதிலும் உள்ள இரு மகள்கள் ஆகியோருடன் மலையடிவாரப் பண்ணை வீட்டு எட்டாண்டு வாழ்க்கைக்கும், முற்றுப்புள்ளி விழுகிறது. இவர்கள் வீட்டை ஒட்டிய இடத்தில் அரசின் குப்பைப் பராமரிப்புத் திட்டம் வருகிறது.இத்திட்டத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஏற்றுச் செயல்படுத்துகிறது.லாப நோக்கின் அடிப்படையில் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்குப் பதிலாக எரிக்கிறது. நச்சுப்புகை வாகீத்தின் வீடு சுற்றுப்புறத்தைச் சூழ்கிறது.  புதைக்கப்பட்ட குப்பைக் கழிவுகளால் நிலம், நீர்நிலை இயற்கைச் சூழல் நாசமாகிறது. துர்நாற்றம் குமட்டலெடுக்கச் செய்கிறது. இதை எதிர்த்து வாகீத்தின் குடும்பம் தனித்து நின்று போராடுகிறது.

       அத்துடன் வாகீத்தின் குடும்பத்துக்குள் ஏற்படும் கொந்தளிப்புகளே படத்தின் பிற்பகுதி ஆகும்.  லெபனான் நாட்டு அரசியலின் பின்னணியில் கதை நகர்வது இப்படத்தின் சிறப்பம்சமாகும். குப்பைக்கிடங்கைப் பராமரிப்பதற்கான திட்டம் மற்றும் பிரதமர் சிலை நிர்மாணம் ஆகியவைகள் பிரான்சு நாட்டு நிறுவனத்தின் பரிசளிப்பு என்ற பெயரில், கார்ப்பரேட்கள் ஒரு நாட்டில் நுழைந்து, ஒப்பந்த வேலைகளைப் பெற (அது குப்பையாக இருந்தாலும்) அவர்கள் விரிக்கும் இலவச வலையானது, எவ்வளவு நாற்றமெடுக்கக்கூடியது என்பதைச் சிறப்பாகச் சொல்கிறது இப்படம். பெய்ரூட் சுற்றுச்சூழல் மாசடைவதை எதிர்த்த கிளர்ச்சிக் போராட்டம் பெய்ரூட் தாண்டி விரிவடைவதையும்;குப்பை மேட்டருகே குடில் அமைத்து போராடுவதையும், இறுதியாக பிரதமர் சிலை தகர்க்கப்படுவதையும் காட்சிப்படுத்தாமல்,தொலைக்காட்சி செய்தியாகவும்;போராட்டக் காட்சிகளை அரை மங்கலாகக் காண்பித்தும் அரசியல் நெடியைக் குறைத்து,கதை அதன் போக்கில் செல்ல அனுமதித்திருப்பது சிறப்பான யுக்தி. கதை நாயகன் வாகீத்,வாழ்வைக்  கடுமையாக அணுகுகிறான்.ஆனால், தாய் இறக்கும் போது,”வாழ்வை எளிதாக கடக்கவேண்டும். கடுமையாக அணுகக்கூடாது”எனக் கூறுகிறார்.ஆக,வாழ்வுக் குறித்த இரு வேறு பார்வை முன் வைக்கப்படுகிறது.  வாகீத்தின் தாய் மரணமடையும் தருணத்தில், மூச்சு திணறும்போது, கேமரா ஜன்னல் வழியாக மெதுவாக வெளியேறி,குருவியின் சன்னமான  சப்தத்துடன், காற்றிலசையும் மரங்கள் ஊடாகச் சென்று மெல்லிசையின் பின்னணியில் இரவு வானத் தாரகைகளோடு பயணிக்கும்; இந்த மரணம் கவித்துவமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தந்தையின் தாக்கத்தால் வளரும் சிறுமி ரிம்மின் ஆழ்மனதில், ஒரு பிரச்னை நேரும்போது, ஒன்று முதல் 44 வரை மனதில் முழுமையாக எண்ணி விட்டால், துர்காரியங்கள் நடக்காது, என்ற கற்பனைக் கதையை நம்புகிறாள். பாட்டி இறக்கின்ற, பெற்றோர் சண்டையிடுகின்ற  தருணங்களில், ரிம் எண்களை எண்ணுவது; தேவதைக் கதைகளை நினைவூட்டுகிறது. முதலில், வாகீத் வீட்டருகே உள்ள தன் தங்கையின் இடம் அவனுக்குத் தெரியாமலே கைப்பற்றப்படுகிறது.

அதில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அடுத்து, குப்பைகளை திறந்த வெளியில் எரிப்பதன் மூலம் வீட்டைச் சுற்றிலும் நச்சுப்புகை உருவாக்கப்படுகிறது. இறுதியாக மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுகிறது. இதற்கிடையே குப்பை மேட்டருகே உள்ள எந்திரங்களை கண்காணிக்கும் சுற்றுச்சூழல் இஞ்ஜீனியர் மூலம், எதார்த்தமாக குடும்பத்திலும் குழப்பம் உருவாகிறது. முடிவில் வீடு மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது; கார்ப்பரேட்டின் இந்த நயவஞ்சக சூழ்ச்சியை இப்படம் சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளது.  படத்தின் மைய கருத்தைச் சிதைக்காமல், பின்னணி இசை அமைந்துள்ளது.  படத்தில் பத்து கதை மாந்தர்களே வருகின்றனர். அவர்கள் ஏற்ற அனைத்துக் கதாபாத்திரங்களிலும் சிறப்புற பொருந்தி நடித்துள்ளனர். குறிப்பாக சிறுமி ரிம்மாக நடித்துள்ள ஷேனா ரெஷ்டம் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர். வாகீத் குடும்பம் வாயிலாக, லெபனான் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தை, மௌனியா அக்ல் சிறப்பாக இயக்கியுள்ளார். பயன்பாடற்ற குப்பைகளின் பெருக்கத்தை, எதிர்கொள்வது குறித்த சரியான அறிவியல் பூர்வமான தீர்வு தேவை என்பதை பார்வையாளர்களின் மனதுக்குள் யோசிக்க வைத்துள்ளது இப்படம். அரசு மற்றும் கார்ப்பரேட் மக்கள் விரோத நடவடிக்கைகளை,மக்கள் இயக்கத்தின் மூலமே முறியடிக்க முடியும் என்ற ஷொரையாவின் முடிவை வாகீத் தாமதமாக ஏற்று; குடும்பத்தோடு பெய்ரூட்டுக்குப் புறப்படுவது;மக்கள் போராட்டங்களில் இணைவதற்கே என்பதை இலைமறைக்காயாக, ஒரு தேர்ந்த கதையின் வாயிலாக நேர்த்தியோடு சொல்கின்றது இந்த லெபனான் நாட்டுப் படம். இப்படம் பல உலக விருதுகளைப் பெற்றுள்ளது.